Thursday, January 30, 2014

திண்ணை காத்திருக்கு.....!!



இருபுறம் திண்ணைகொண்ட சாலையினில்

இருகை வீசி இளந்தோழிகள்சூழ் செல்லும் மெல்லியளால்

இளந்தென்றல் தீண்டியதில் சிலிர்த்தவள்..! நாணத்தில் சிவந்தவள்,.!

புல்லின் வளைதலை கொண்ட இடையுடையவள்

பூவின் இதழ்மென்மை ஏற்ற மென் நடையுடையவள் ,

காணும் என் விழி இமைக்க மறுத்ததில்.

எனக்குள் இசையாக்கிவிட்டவள்

கூட்டம் சூழ் தோழிகளின் மத்தியில் மெல்லியஇடையினில்

கையிருத்தி நிமிர்ந்து நோக்கியவள்

தன் அகன்ற கரும் வண்டென விரியும் விழிக்குள்

விழுங்கிக்கொண்டாள்  எனை ..!!

நிலம் நோக்கி  புன்னகைத்தவள் கூட்டதில் சிலீர் சிரிப்பினூடே

கலந்து மறைந்தாள்..!!

அலையும் விழிகளும்  தவித்த இதழுமாய்

அங்குமிங்குமாய் என் பார்வை தவிக்க  திண்ணையோரமும்

தினம் தினம் காத்திருக்கு எனக்காக அவளை காண  ..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

Monday, January 27, 2014

உனை காண காத்திருக்கையில்…


நிலவும் விண்மீனும் வானத்தில் நடனமாடும்..!!

மீனினம் கடலினில் சேர்ந்தாடும்..!!

மாம்பழ வாசமதில் மரத்தினை சுற்றி

வண்டும் சுழன்றாடும்..!!

அள்ளி தெளிக்கும் வாசல் நீரும்

கைகளில் நின்றாடும்..!!

புள்ளிவைத்து கோலமிடும் விரல்கள்

நாணத்தில் நாட்டியமாடும்..!!

பின்னலிட்ட கூந்தலும் தன்னிலை மறந்து

அவிழ்ந்து அலைபாயும்..!!

இருளின் வைரமாய் மின்னும் விளக்கின்

ஒளியும் நின்றாடும்..!!

என் மன ஒலியும் ஆர்பரிப்பாய்

உன்புன்னகையில் துள்ளிவிளையாடும்..!!

உனை காண வேண்டி தவம் இருக்கையில்

விரல்களுடன் இணைந்த நாரும் பூக்களுடன்

சேர்ந்தாடும் !!இவையனைத்தும் போதும் எனில்

விரைவினில் வந்து முகம் காட்டிவிடு..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்

Saturday, January 25, 2014




நீயென் வாழ்வினில்….


நின்னை நினைப்பதில் என் வாழ்வில்

இன்பம் மட்டுமே நிகழ்கிறது என்பதை

நின் மனம் அறியுமோ தென்றலே!

உன்வரவை என்னுயிர் கண்டதும்

உள்ளம் விருப்பத்தில் இழைய

நிலவும் ஒளிர்கிறது என் வண்ணமாய்!

உலாவும் மானென துள்ளி

மகிழுந்திடுவேன்! மன ஓடத்தை ஓட்டி

மகிழ்ந்திடுவேன்! தேன் துளியில் மூழ்கும்

வண்டென சுற்றி பறந்திடுவேன்!

நிலவை மொய்க்கும்  விண்மீனாய் 

கீற்றை தழுவி சலசலக்கும் தென்றலாய்

முப்பொழுதினிலும் உன் மனதை வென்ற

களிப்பினில்  சின்னப்பறவையின் கீச்சுக்குரலாய்

பாடி ஆடித் திரிந்திடுவேன்…!!



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்




Friday, January 24, 2014

ஒரு மதியபொழுதினில் ஒர் நாள் ..1930 ல்.....







முற்றத்து நடுவினில் ஓயாமல்

சத்தமிட்டபடி தானியத்தை கொத்தித்தின்றன

குருவிகளும் காக்கைகளும் புறாக்களும்

ஒரு மதியபொழுதினில்


இனிமையும் ஆர்பரிப்பும் அவைகளின்

இறக்கை அடிப்பிலே தெரிந்தது  அதில்

ஒற்றை புறா ஒன்று உணவை  விழுங்கி

ஊட்டிக்கொண்டிருந்தது பிள்ளைக்கு


அடுக்களையில் புகை சூழ் நடுவே

கற்றையாய் விழும் கூந்தலை

அள்ளி முடிக்க வியர்வை மழையால்

குளித்து போயிருந்தன அவள் விழிகளும்


சைக்கிளின் மணிச்சத்தத்தில் படபடவென

பறந்த பறவைகள் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது

கிடுகிடுவென்று வாசல் போனது மனம்


நீள்வாசலின் நேரேதிரே மாட்டியிருந்த

அலமாரி கண்ணாடி கூறியது அவள்

நெற்றி பொட்டிழந்தக்கதையை ..அவன்

நினைவுக்குழந்தையாய் கரம் பற்றி 

அணைத்திருந்தான்


அழவுமில்லை மீண்டும் பொட்டிட துணிவுமில்லை

பறவைகளினூடே ரெக்கைகட்டிபறந்தமனம் 

சிலாகித்தது ..!!

நெல் மணிகளை சிதறிக்கொண்டிருந்தது

கைவிரல்கள்..!



கவிதையாக்கம் 
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்** 

Thursday, January 23, 2014

கருப்பு திராட்சை




படபடவென்று சிறகு விரித்து கோர்த்துக்கொள்ளும் இமைகள்..! 

நிற்க மறுத்து நாட்டியமாடும் இதழ்கள்..! 

இன்னிசை மீட்டிடும் இதயம் இயல்பை மறுக்கும்..!

சிலிர்க்க செய்யும் இளம்தென்றல் ..!

அந்திமாலையின் சிகப்புபடர்ந்து கொள்ளு(ல்லு)ம் என்னில்..!

உனைக்கண்டதும்..!


எனைக் கண்டதும் உன் காதோர வியர்வையும்

உன் காதலை சொல்லும் என்னிடத்தில்

சந்தோசத்தில் மின்னும் வைரமாய்

மலரை ஈர்த்த வண்டாய் மையல் கொள்ளுவேன்

உன்னிடத்தில்..!

தத்தையென கொஞ்சிபேசும் இதழ்வருடி என்னிதழ்தேனால்

நிரப்புவேன்..!!


தொடுதலில் சில்லென மின்னலாய் பரவும் ஒளிவெள்ளமும்,

மூச்சுக்காற்றின் இணைதலில் முடிவற்று மெளனநிலையில்

சட்டென விலகி செல்லும் உன் உயிரின் ஈர்ப்பும் வேகமும்

தழுவிடும் தென்றலின் தீண்டலில் அறிகிறேன்..!!

உன் இடைவெளியற்ற அன்பின் இருக்கம்

வெண்மேகத்தில் கனிந்த கருப்பு திராட்சையின் அசைவில்..!!

அறிவேன் உன் எண்ணத்தை..!

இனி பிரிதல் என்பதே இல்லை நம்முள் இருக்கிக்கொள்கிறேன்

இடைவெளியின்றி….!!



**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**

Wednesday, January 22, 2014

காற்றே என் முதற்காதலி




உன் வசீகரத்தை என்னிடம் சேர்ப்பிப்பாள்

உன் புன்னகையை எனக்குள் விட்டு செல்வாள்

உன் சுவாசத்தை, உன் வாசத்தை எனக்குள் தேனாய்

நிரப்புவாள்..!!

என் மெய்தொட்டு வந்த அவள் உன்னை முழுதுமாய்

தீண்டுவாள் செல்லமாய் ரசிப்பாள் ..!!

யாரும் அறியா கால்களிரண்டில் முகம் புதைத்து உன்

விழிவழியும் கண்ணீரையும் ஈரமாய் என்னிடம் சேர்ப்பிப்பாள்..!!

நீ தனியே பேசிக்கொண்டிருப்பதையும் அறிபவள் அதை

செவிமடுப்பவள்!

காத்துநிற்கும் பொழுதுகளில் கோபம் கொண்ட உனை

தடுத்துஆட்கொள்பவளும் இளந்தென்றாலாய் உனை

தீண்டியவளும் , உன் கார்க்கூந்தலை தழுவி உன் அழகை

ஆராதிப்பவள்!!

தீயின் வெட்கையாய் உன்னை சுற்றி சுழல்பவள்.!!

உனை குளிர்விப்பவளும் அவளே!! நீ அறியா உன்னை

முழுதும் அறிந்தவள் ..!!

என்றாவது யாராவது உனக்காக காத்து இருக்கிறார்களா?

உன்னிடம் என் வாசத்தை சுமந்து வரும் காற்றிடம் கேள்

பதிலேதும் கூறாமல் மெல்ல ஒரு தீண்டலை மட்டுமே  விட்டு

செல்லும் காற்றுக்கு யாசிக்க தெரியாது யோசிக்கவும் தெரியாது

ஆம்! உனை  முழுதும் அறிந்த காற்றை நான் காதலிக்கிறேன்

என் முதற் காதலியாய் ..!!




Tuesday, January 21, 2014

என்காதலி..!!



தேடித்தான் அலைகிறது மனமெனும் ஓடம்

சந்திப்பில் அலைபாயும் எண்ணங்களை

இடைவெளியில்லாமல் இளைப்பாற்ற

என்றாவது ஒரு நாள் சந்திப்போம்  எனும் சூழலில்


மெல்ல ஓடும் ஓடமும் நினைவு அலைகளில்

கவிழ்த்துப்போடுகிறது நிதர்சனத்தை

பொழுதுகள் முச்சூட்டிலும் காதலை

எண்ணித்தவிக்கும் மனஓடம்

நிற்காமல் சுற்றிசுழல்கிறது உன் நினைவுகளில்


காணாமல் இருந்த கணங்கள் இலைஉதிர்தலைபோல்

நீதானோ அங்கே என்று கண்ட கணத்தில்

பச்சென்று ஒட்டிக்கொள்கிறது ஓடத்தில்


துளிர்த்த இலையின் சாயலில் கைக்குள்

பிஞ்சு பிள்ளையை இருக்கிக்கொண்டு பெட்டியை இழுத்து

செல்லும் மீசைக்காரனிடம் என்னைதான் எங்கே

என்று கேட்கிறது போல ஏதோ? கேட்கிறாய்…


விழிதடவி தொடர்ந்துதான் வருகிறேன் உனை!

என்றாவது உன் நினைவுபொழுதினில் என்னை

தேடியிருக்கிறாயா?


வேகமும் துடிப்பும் மன ஓடத்தில்கூடுதலாக

நெருங்கி செல்கையில்  நெஞ்சின் நினைவுமுகம்

என்காதலி..!! இன்று இவளில்லையென்று

தெரிந்த கணத்தில் காத்திருந்த மனஓடமும்

நெருஞ்சி முள்ளில் சிக்கி சிதைகிறது


நினைவுஅலைகளால் நிரம்பிய ஓடத்தில்  

மூழ்கித்தான் போகிறது என்முதற்காதலும்

நீ இல்லை என்று தெரிந்த பின்….


**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**


Monday, January 20, 2014

உன்னீர்ப்புவிசையெனும் சக்தி


வீட்டின் முற்றத்து நடுவே மணம்வீசும்

புகைசூழ் வெளியில் காத்திருக்கையில் கண்டேன் உன்னை..

நிதமும் உன்னை காண காத்திருப்பது

சூழும் புகைகூட அறிந்துவிட்டது நீ அறியாயோ?

கண்மூடி யோசிக்கிறாய் விழி திறந்தால் விட்டுவிடுவாய்

என்னை உனக்குள் என்றுவிழிமூடுகிறாயோ?

காத்திருக்கிறேன் விழியினோரம் இமைவேலிகளுக்குள்

சிக்கிய சிற்றெரும்பாய்…

விழித்துவிடு என்னை உனக்குள் கோர்த்துவிடு..!!

பின்னர் யோசிக்கலாம் இணைந்து விழிமூடிவிரல்கோர்த்து

உன் ஒரு விழிச்சொல்லுக்காக அசையாமல்

அசையும் பூமியில் காத்திருக்கிறேன்

உன்னீர்ப்புவிசையால்

**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை)

மாலைப்பொழுதினில் ஈன்ற முத்தம்






நீள்விழியாள் நிலம் நோக்கி நடக்கயில் , நாணம் சுமந்த

கன்னம் பொன் வண்ணம் அந்தியிலிணைய  

காரிருளை உட்கொண்ட கார்க்கூந்தலும் காற்றில் நெகிழந்து

கழுத்தின் வளைவுகளில் பரவ

கொலுசின் மெல்லிய ஒலியுடன் கூடிய தாளத்துடன்

இணைந்த நடையும் கொண்டவண்ண மயிலாள்,

விழிமுன்நிற்கும் எனை கண்கொண்டு காண மறுத்து,

வளையல் சத்தமிட்டு வாவென்று அழைத்த பதுமையானவள்,

கள்ளப்புன்னகையை  கைகொண்டு மறைத்து ..!!

என்னில் நெருங்குதற் பொருட்டு நின்று நின்று வேகமாய் செல்லுவாள்..!

எட்டி பிடித்து என் கைகொண்டு இடைதுவள இருக்க

மாலையில் மலர்ந்த அந்திமந்தாரையாய் பூத்திருந்த

கன்னக்கதுப்பினில்  மெல்ல முத்தமிட்டு ,விட்டுவிடு

என விரட்டும் கைகளுக்கு மத்தியில் வேணாம் எனக்கூறும்

விழிகள் இரண்டும் பின்னிபிணைய, உன் இதழ்நெருங்கிய என்னுள்

புதுப்புனல் மின்னாலாய் பாய ஈரம் சூழ் இதழ் மெய்யின் நெருக்கத்தில்

வறட்சியால் தவித்து தாகத்தின் தீரலில் தொத்துக்கின்ற தத்தையாய் தோளினில் துவண்ட

மான் விழியாள் மாலைப்பொழுதினில் ஈன்ற முத்தம் மெய்தானே ..!!

என கிள்ளிபார்க்கையில் மெய்தான் என்றது உணர்வு..!!



**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை))

Sunday, January 19, 2014

யெளவனமாய் ஒளிர்கின்ற... விண்மீனாய்....





நீ வரும் நேரத்தை காணும்பொழுதில்..!!

திசைகள்முழுதும் பொன்னிறதேகமாய் தகிக்கும்

அந்திப்பொழுதும்மயங்கித்தான் போகும்.!!

புன்னகையில் பூத்த செவ்விதழாய் பூரித்துப்போகும்

அந்தியைக்கண்ட காரிருளும் கவிழ்த்து போட்ட

அமாவாசை நிலவாய் தேகம்குலுங்க புன்கைக்கும்.!!  

வண்ணநிலவாய்..,முழுமதியாய் ..., செவ்வந்திப்பூவாய்..,

தன் அழகையெல்லாம் சேமித்துவைத்த மாதுளங்கனியாய்..,

எனை ஆட்க்கொண்டு வாழ்வை சித்தரிக்கும் வண்ணமாய்..,

காணும் பொழுதின் ஊற்றாய் ..,

பொங்கும் உள்ளத்துஎண்ணம்தனை கல் கொண்டு

வடிக்கும் சிற்பமாய் ..,

எழுத்தில் வடித்தாலும் நிறக்காமல்பொங்கி வழியும்

எரிமலை ஊற்றின் கணலாய்,

தழுவிச்செல்லும் நதியின்கூழாங்கற்களாய் ,கணநேரத்தில்

மாயைபுரியும் மின்னாலாய்,

யெளவனமாய் ஒளிர்கின்ற விண்மீனாய்.., தகிக்கும்

உள்ளத்தின் இன்பம் கூட்டும் இளந்தென்றலே..என் காதலியே!!

வானின்மீது மேகம் கொண்ட அன்பாய் ,

பூவின்மீது மோகம் கொண்ட சில்வண்டாய் ,

ஒளிரும் தீபத்தின் மீது மையல்கொண்ட எண்ணையாய்,

பூமியைதழுவ நினைக்கும் வானத்தின் எண்ணமாய்

என் விழியிற் அந்திப்பொழுதில் உனைகாணும்போது

களிக்கொள்கிறேன்…..!!

**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை))



Friday, January 17, 2014

குயிலோசையில் மூழ்கிய நினைவோசை.....



வட்ட நிலவாய்! உருளும் விழியாய்!

மழைநேரத்தும்பியாய்! தேனருந்தும் தட்டானாய்!

மனதிற்கிசைவாய்! மெல்லிய குரலொளிக்க

நினைவுச்சோலையில் நீந்திக்களிக்கையில்

பாடியது அந்தி வெய்யிலா?

வெளிவரக்காத்திருக்கும் மதியா?

அந்தியைமுத்தமிடக்காத்திருக்கும் சமுத்திரமா?

அங்குமிங்குமாய் அலைபாயும் கருவிழிகளில்

காந்தலாய், கருப்பாய், கரும்பாய்

நீல்வால் கொண்டு நெடிதுயர்ந்த மரம்தனில்

தனியே நான் களிக்க உன் குயிலோசை!!

நீந்தும் வெண்மேகமாய் நீட்டித்த அந்திப்பொழுதின்

மழைநேரமேகத்தூதனாய்  எனக்குள் சொட்டும்

தேனாய் தித்திக்க சட்டென்று படபடத்து பறக்க

கருமை சூழ்மேகம் தாரையாய் பொழிய ஆரம்பித்தது

ஆனந்த களிப்பினில் மூழ்க ஆரம்பித்தது என் மனம்

உன் வரவில்....


**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை))



Thursday, January 16, 2014

கள் அருந்தாமலே கடலுக்குள்



மனித தன்மையே அற்ற பலர் நச்சுத்தன்மையை  கொண்டு

பதர்களை போன்று நம்மில் உழல்வதை கண் கொண்டு கண்டும்

காணாமல் இருந்துவிடாதே !!

பிஞ்சு மனம் அறியாமல் கள்ளமில்லா சிரிப்பை உணராமல்

கை கொண்டு அணைக்கும் கட்டவிழ்த்த காளையவன்!!

கண்அறிந்தும் மனம் இருக்க மூடிய மூடனவன்!!

மானிட தன்மையற்றவன் காமத்தை வெளிப்படுத்தும்

மரக்கட்டையவன்!!

மானிடர்களே கண் கொண்டு கவனியுங்கள்!!

விழி கொண்டு படியுங்கள்!! தன்மைக்கு ஏற்றுவாழும்

மனிதனும் சுயநலத்தில், விழி தெரிந்தும் மூடனாய் போகலாம் !

புவிஅறியா பிஞ்சுகளுக்கு புரிய வைப்பதும்,

நம்பிக்கை அளிப்பதும் பெற்றோரின் சிந்தையிலே

உதிர்க்கவேண்டிய முத்தல்லவே!!

நல்ல தொடல்,கெட்ட தொடல் புரிய வைப்பது,

வாழ்வை புரிய வைக்கும்.. வாழ்வை இனிமையாக்கும்

இளந்தளிர்களுக்கு..!! கணம் கருத்தினில் கொண்டு செயல்படும்

இளசுகளுக்கு ஏன் ? எதற்கு? என்ற கேள்வியதனை

மறந்து ஆயிரம் மனித பயிர்களுக்குஇடையே வாழும்

ஒரு பதரின் சிலுசிலுப்பும் தோன்றலும்

உடுத்தலில் உடையில் உயர்வும், ஏமாற்றுவதில்

முதன்மையாய் செல்லும் பாதையிலே நிதமும்

நித்தமும் காத்திருப்பதும்  தேவையற்ற பேச்சுக்களும்

சுண்டியிழுக்கும் கண்ணாடி பார்வைகளும்

கால ஓட்டத்தில் கண்ணுக்குள்ளே வேறேதும் அறியா

மயக்கம் கதாநாயகனாய் கவர்ந்திழுக்கும் வயதின் இனக்கவர்ச்சியால்!!

காணும் இளசுகளை,கண்டதும் காதல் எனும் போதை,

கள் அருந்தாமலே  கடலுக்குள் கவிழ்த்து விட, கரை அறியாகாதலர் தம்

மூழ்கிக்குளித்து முத்தெடுத்து,  மூன்றென்ன ஏழுலகமும் அறிய

முட்டி மோதியென்ன.. முழுதும் முடிந்த பின்

முக்கால் முழ கயிற்றில் முழுதும் மறைந்து போவதென்ன..!!

வாழ்தலில் காதல் வேறு….இனக்கவர்ச்சி வேறு இதை அறியா

பிஞ்சுபிள்ளைகள் தொலைத்தலில் வாழ்வை தொடர்கின்றனர்..

கவனத்துடன் வாழ்தலில் வானம் மட்டுமல்ல கடலும் உன் வயப்படும்..!!


**தமிழ்**
(தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை))