Wednesday, September 19, 2012

உயிரின் தோன்றல்



“நானே பயப்படலை..நீங்க ஏன் அதிகம் பயப்படறீங்க” ன்னு அவருக்கு

நான் தைரியம்சொல்லி வாசல்வரை போய் வழியனுப்பிவிட்டு....

வந்து தொலைக்காட்சியை அணைத்துவிட்டுத்தூங்க தாயரானபோது..

“ஏன் மா மாப்பிள்ளை அதிகம் பயப்படுகிறாரா….? ன்னு கேட்ட

அம்மாவிற்கு.............

சிரிப்பினூடே “ம்” என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்தபோது அருகில்

உட்கார்ந்து மெல்ல என் வயிற்றை தடவி ,“நாள் கடந்துடுச்சேடா ….

இன்னும் உனக்கான நாள் வரலையேப்பா ” என்று அம்மா சொன்னபோது,

முதல்முறையாய் எனக்குள் பயம் வந்தது….

காட்டிக்கொள்ளக் கூடாது என்று மறுபக்கம் திரும்பி படுத்தபோது

சன்னமாக வலித்தது..என் பயம்போலவே அதுவும் கொஞ்சம்

கொஞ்சமாக அதிகரித்தது .முகத்தை திருப்பி கட்டிலின் அருகே கீழே



தூங்கத் தயாரான அம்மாவிடம்…. “ம்மா வலிக்குதும்மா” எனச்

சொல்வதற்குள் இன்னும் அதிகமாக “வலிக்குதுமா ....

ரொம்ப வலிக்குதும்மா ..” என சன்னமாகக் கூற

“பொறுத்துக்கம்மா..பொய்வலியாய் இருக்கும்.. காலையில

டாக்டர்கிட்ட போகும்போது சொல்லலாம் டா” ன்னு சொன்னபோது..

“….ம்மா ..ரொம்ப வலிக்கிது ம்மா..” என்று வலியால் துடித்த

என் முகத்தைப்பார்த்துக் களேபரம் ஆன அவள் வாரிச் சுருட்டிக்

கொண்டு எழுந்தாள்...

இருவருமாய் கிளம்பினபோது, நடுக்கூடத்தில் அப்பா உறங்கிக்கொண்டு

இருந்தார் ..“நாங்க ஆஸ்பிடலுக்கு போறோம் கதவை பூட்டிகிங்க” என்று

சொல்லிக்கொண்டே என்னை தாங்கிபிடித்து நடந்தாள் அம்மா..

போகும்வழியில் அவருக்குச் செய்தி சொல்ல அவரும் அங்கு வந்துவிட்டார்..

அவர் இவர் என எல்லோரும் சுறுசுறுப்பாய் இயங்க கையில் ஊசி

குத்தப்பட்டு ட்ரிப்ஸ் இறங்கியது , வலி வந்து வந்து போகிறது ..

அப்படியே அந்த நாள் முழுதும் ,தாங்க முடியா வேதனை ...

ஆனால்… அன்றும் ஏதுவும் நடக்கவில்லை....ஒரு நாள் போனது வலியிலும்

வேதனையிலுமாய்….

மறுநாள் அத்தை வந்தாங்க….நிறைய பிரசவம் பார்த்தவங்க….

“ஏண்டிமா… எப்படி இருக்கே” "அருகில்வந்து பேசியது... எங்கேயோ

துரத்திலிருந்து கேட்பதுபோல் கேட்டது எனக்கு..."

”எத்தனையோ பிரசவம் பார்த்திருக்கேன் நான்…உனக்கு மட்டும்

இவ்வளவு பிரச்சனை ....” என்று சொன்னபோது பயம் என்னை மீண்டும்

தொற்றிக்கொண்டது.

…வலியும் வேதனையும் என்னையே அன்னியப்படுத்திக்கொண்டிருந்தன.

வந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராய் வெளியேற ..நான் மட்டும்

வலியுடன் உள்ளயே... “பயப்படாதே” எனச் சொல்லி அத்தையும்

வெளியே போனார்கள் .ஆரம்பித்தது அந்த வலி…. சொல்லமுடியாத

அளவுக்கு சத்தம் போட்டேன்...கூடவே திட்டும் வாங்கினேன்

அங்குள்ளோரிடம் ..


மருத்துவர் வந்து பார்த்து அவசர அவசரமாய் ஏதோ பேசினாங்க..

“ஆபரேஷனுக்கு ரெடி செய்யுங்க” ன்னது மட்டும் பளீரென்றது என்

காதில்….ஐயோ எனக்கு ஊசின்னாலேயே வலிக்குமே....இப்போ

என்ன செய்ய..

என் வயிற்றில் இருப்பது மகள்தான் என்ற நினைவில் வலியிலும்

வேதனையிலும் பேசினேன் அவளிடம்...

அம்மாடி ….செல்லமே உனக்கு பிடித்த நேரத்தில் பத்திரமாய்

வந்து விடுடா ...அம்மாவுக்கு ரொம்ப வலிக்கும்டா….

ரொம்ப வலிக்கும்டா …செல்லம்… எனத் திரும்பத் திரும்பச்

சொல்லிகொண்டேயிருந்தபோது..

உறைவது போன்ற குளிரை எனக்குள் உணர..சில்லென்று ஒரு கை,

சுண்டு விரலில் மச்சத்துடன் …யாரென்று பார்க்க…. அந்தப் புன்னகை மட்டும்

அடிமனதில் பதிய…. அப்படியே மயங்கி ...............


……கண் திறந்தபோது… மங்கலான வெளிச்சத்தில் தோன்றினாள்

“அவள்”…. என் தலையைக்கோதிக் கொண்டிருந்ததை உணரமுடிந்தது….

நான் அதிகசிரமப்பட்டு கண்களை அகல விழிக்க….அவள் ஒரு

பந்துபோல சுருண்டு காற்றாய் எனக்குள் போக…சில மணித்துளிகளில்

…தும்மலுடன் "மகள்" பிறந்தாள் …!

வேதனையின்றி…… என்னையும்…. என் குழந்தையையும்

காற்றைப் போலப் பிரித்தாள் அவள்...!!

1 comment:

  1. அற்புதம்!

    மகப்பேறின் நொடிகளை வலியாய் உணர்த்தும் வைர வரிகள்...முதன் முதலாய் எழுத்தால் உணர்த்திய தங்களின் திறமைக்கு எனது வணக்கங்கள்.

    வாழ்த்துக்களும் பராட்டுக்களும்!!

    ReplyDelete