Tuesday, February 5, 2013

தோட்டத்து வீடு




கவிதா - அவள் காத்திருந்த நேரத்தைவிட, எதிர்கொண்டு நின்றிருந்த சாலையின் நீளம் அவளுக்கு பெரிதாகத் தெரியவில்லை. நரேனை எங்கும் காணவில்லை. எப்படி தேடுவது! என்ன செய்வது! இந்த இடமோ அவளுக்கு புதியது, பஸ்ஸில் போகும்போது மட்டுமே இந்த இடத்தை பார்த்திருக்கிறேன். நரேன்கிட்ட வரேன்னு சொன்னது தப்போ? பயமா இருக்கேனு நினைக்கும்போதே, தோட்டத்தை பற்றி நரேன் சொன்னது நினைவுக்குவர, அதைப்பார்க்கும் ஆசையும் அவளுக்கு அதிகமாகிக்கொண்டே இருந்தது.


அவளை நினைத்து எனக்கே கொஞ்சம் பயமாகவும் வியப்பாகவும் இருந்தது, நரேன் வரட்டும்…. ‘ஏன்டா இவ்வளவு நேரம் என்னை காக்க வைச்ச?’ ன்னு கேக்கணும்..

யோசித்துக்கொண்டே கவி சாலையைக் கடக்க எத்தனித்தபோது கேட்ட சத்தம் அவளை எங்கோ கொண்டுபோவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.


ரோட்டின் தனிமையைப் போக்க அடுத்த பஸ்சும்வர, பயமும் கூடியது. ‘என்னை யாரும் பார்த்து விடுவார்களோ’ , ‘நான் இங்கு நிற்பதை அம்மாவிடம் சொல்லிவிடுவார்களோ?? ’ என்றெண்ணியவாறு அந்த பஸ் நிறுத்தத்தின் அருகினில் இருந்த புளிய மரத்தின் பின் சென்று நின்றுகொண்டாள் கவி.

அப்படியே அந்த பக்கம் பார்த்தால்.. அறுவடை செய்யப்பட்ட நிலம், யாருமில்லாமல் வானம் பார்த்திருந்தது , ‘நான் நரேனுக்காக காத்திருப்பது போல!..ம்.. இந்நேரத்திலும் என் யோசனை இப்படிப் போகுதே ...வருவானா?
ரொம்ப தூரத்தில் ஒரு சைக்கிள்.. வருவது நரேனா ?? ஆமா.. அவன்தான்!’ ‘வரட்டும் இன்னைக்கு அவனுக்கு இருக்கு’ என தனக்கத்த் தானே சொல்லிக்கொண்டு கோவத்தை இதழில் பொருத்திக்கொண்டு ‘உம்மென்று’ அவனை எதிர்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் அவள்.


“கவி..கவி....பேசுடா.. உனக்குத் தெரியும்தானே.. எப்போதும் நான் உன்னை காக்க வைக்கமாட்டேன்னு… நீ என்கிட்டே பேசிடுவ.. எனக்குத் தெரியும்” னு சொல்லி சிரிக்க, “ம்க்கும்.. இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல” ,என சொல்லி கொண்டேபுன்னகைத்தாள்.

“பஸ் நிறுத்ததில என்ன கூட்டம் கவி? ” எனக்கேட்ட நரேனிடம், பதில் ஏதும் கூறாமல்“நரேன், வா போகலாம்” என்றதும் ஏதும் சொல்லாமல் அவளைப் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தான்.


“நரேன் நான் சொல்றத கேக்கறியா?? ” “நீ சொல்றத நான் என்னைக்கு கேக்கமா இருந்திருக்கேன் கவி… சொல்லேன்” எனஆசையாய் சொல்ல, "அறுத்து வைக்கப்பட்ட கதிர்களும் அதை இழந்து கஷ்டப்படும் நிலங்களும்".. “கவி நீ அருமையா ரசிக்கிற, அதுக்குதான் உனக்கு கவினு பேர் வைத்து இருக்காங்க… எங்க மாமா”


“என்னது மாமாவா? டேய், எங்க அப்பா காதில விழுந்தது உன்னைய அவ்வளவுதான்” “என்ன செய்வாங்க கவி ? என்னைய வெட்டிடுவாங்களா ? கவி ..என்ன ஆனாலும் நீதான் எனக்கு பொண்டாட்டி”, சொல்லி கொண்டே, அவளின் கையை இருக்கப் பிடித்துக் கொண்டபடி
"இந்த பிடிதளர்ந்தாலும், என் அன்பு பிடி தளராது " என்றான்.


“எங்க தோட்டத்த பார்த்தா, கவிதை சொல்லிட்டே இருப்ப, என்கூட பேசக்கூட உனக்கு நேரம் இருக்காது கவி.
அதோ தெரியுதே…அதான் எங்க தோட்டம்” எனச் சொல்லி அவளின் கையை விடுத்து அவளுக்கு முன்பாக தோட்டத்திற்குள் நுழைந்து சைக்கிளை நிறுத்திவிட்டு “இளநீர் பறித்து வா, அப்படியே இரண்டு பேருக்கு மதிய உணவு ரெடிசெய்” என தோட்டக்காரனிடம் சொன்னான் நரேன்.

“வேறு யாரும் வருவாங்களாய்யா? " என்ற கேள்விக்கு பதில் கூறாமல் தென்னை மரங்களுக்கிடையே கிடந்த கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்த கவியினருகில் போய் அவளைக் கண்கொட்டாது பார்க்க…“நரேன்... நரேன்... " ன்னு அவள் கூப்பிட்ட குரலில் கிறங்கித்தான் போனான். “கவி, உன் கவிதைக்காகவே காத்திருக்கிறேன்” ன்னு சொல்லி முடிக்கும்முன் அவள் கவிதை சொல்ல ஆரம்பித்து… பேசப் பேச நேரம் போனதே தெரியவில்லை.

தோட்டக்காரர் கொண்டு வந்து வைத்த இளநீர்கள் காலியாகின. கவியின் கவிதை மழையில் நனைந்தபின் , “சாப்பிட போகலாமா.. ” என்ற நரேனிடம் “எனக்கு பசியே இல்லை நரேன் இந்த இடத்தை பார்த்ததும் பசியே போய்விட்டது” என்றாள்.


“ம். சாப்டாம இருக்க கூடாது வா! சாப்பிட போகலாம்
மதியம் 2 மணி, பஸ்ஸை நீ ,பிடிக்கணும் நினவிருக்கா கவி” என்றவன் சொன்னபோது “அய்யா… வேறு யாரும் வருவாங்களா ? ரெண்டு பேருக்கு சமைக்க சொன்னீங்களே…” என்ற தோட்டக்காரனிடம்
“நீ வெளியில இரு.. நான் சாப்பிட்டு வந்து உன்னிடம் பேசறேன்” ன்னு சொல்ல,மெல்லமாக புலம்பிக்கொண்டே வெளியே போனான் நடேசன்.
“கவிதா, நீ சாப்பிடு டா” என்றபடி, நரேனும் சாப்பிட ஆரம்பித்தான். கவிதா அமைதியாய் சாப்பிட்டாள்.

நடேசனிடம் பஸ் நிறுத்தம் வரை போயிட்டு வரேன்னு சொல்லிட்டு, சைக்கிளை எடுத்து கொண்டு நரேன் கவியுடன் கிளம்ப அதுவரை அமைதியாயிருந்த நடேசன் “அய்யா, உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும், நம்ம தோட்டத்துக்கு பக்கத்திலிருக்கும் பஸ் நிறுத்ததில ,இன்னைக்கு காலையில ஒரு ஆக்சிடென்ட் அய்யா. அதனால, இந்த மதிய நேரத்தில அங்க நீங்க போகவேணாம்ய்யா, கொஞ்சநேரம் இருந்துட்டு சாயங்காலம் போங்களேன்”. “நீங்க இங்க வந்ததில இருந்து சரியில்லை தனியாவே பேசிட்டு இருக்கீங்க! என்னாச்சு அய்யா, உங்களுக்கு! ” என நடேசன் சொல்லி கொண்டேயிருக்க.....அதுவரை அமைதியாய் கேட்டு கொண்டு நரேனருகில் நின்றுகொண்டிருந்த கவி ஏதும் கூறாமல் வேகமாக போக ஆரம்பித்தாள்.

“கவி....கவி ... ” அவளை தொடர்ந்து கூப்பிட்டு கொண்டே நரேன் போக, அவன் பின்னே நடேசன் ஓடி வர,
வேகமாக நடந்து போனாள் கவி.

நரேன் பஸ் நிறுத்தம் வந்து பார்த்தபோது அங்கு கவிதாவை காணவில்லை!


ஒரு வித நடுக்கத்துடன் நரேன் நடேசனைப் பார்க்க, அவன் “இங்கதான்யா.. இந்த புளிய மரத்துக்கு நேரதான் ஆக்சிடென்ட் நடந்திச்சி ”
என்றதும், “அய்யோ! கவி.. கவி.. ” என அரட்டிகொண்டே ரோட்டில் ஓட.............

“அய்யா, எங்களை விட்டுட்டு போய்டீங்களே அய்யா, என நடேசன் கதறுவதைப் பொருட்படுத்தாமல் புளிய மரத்தின் அருகினில் நின்றிருந்த கவிதாவின் கையைப் பிடித்து கொண்டு தோட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தான் நரேன்.

1 comment:

  1. ;))

    நன்று.

    அடிக்கடி ஆவிகளைக்கொண்டு கதை எழுதுகின்றீர்கள்!

    ReplyDelete