Tuesday, February 4, 2014

வாடைக்காற்று



சலசலக்கும் இலைகள் தழுவிய வாடைக்காற்று 

அதன் தழுவலில் தேன் துளியென விழித்த மனது

சுழன்ற அந்தஒரு பொழுதின்உன்னுடனான

நினைவுகுமிழ்கள் மூச்சுக்காற்றில் பயணிக்க

அதனுடன் இணைந்து நானும் பயணிக்கிறேன்

அரவமற்ற அமைதியான நறுமணம் சூழ

உன்னுடன் இணையும் அந்த தருணம்

நான் என்னையிழந்த தருணம்..!!

கன்னக்கதுப்பில் பனிக்காற்றின் குத்தலில்

குழம்பித்தான் போய்விட்டேன் நிஜமா ?

நினைவா?

 என்று புரண்டு படுக்கிறேன் வெற்றிடமாய் ..!!

வெப்பமாய் காற்று உள்ளேயும் வெளியேயுமாய்

விழித்து பார்க்கிறேன்….!! 


புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருக்கிறாய்நீ .!!




கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ் 

Sunday, February 2, 2014

இது உனக்கானது…!!





தனிமையில் தாள் எடுத்தேன் என் காதல்

தனை உன்னில் எடுத்துரைக்க

இனிப்புச்சுவையில் திகட்டாத சுவையுமாய்

அமிழ்தமாய் எனதன்பில் கலந்து

கிடக்கும் என்னுடைய முகவரியே

என்னுயிரே..!!

முக்கனியே ..!!

முழுமதியே ..!!

உனை பற்றி எழுத

தென்றலினூடே தழுவி

தூண்டுகிறாய் என்னை..!

விண்மீனெல்லாம் கூடி ஒன்றாய்

மறைந்திருக்க

பூஞ்சோலையும் குயிலை உறங்கச்சொல்லி

காத்திருக்க

விடியும் வேளையும், நீல வானமும்

பசும் பட்டாடைஉடுத்திய நிலமும்

நான்  உனை  நினைத்து வடிக்கும் வார்க்கும்

வார்த்தைகளை பார்த்து அதிசயப்பட்டு போகிறது..!!

எனில் நகைக்கும் விழிமலருடையவளே

நீ மட்டும் தனிமையில் படித்துவிடு….!!

இது உனக்கானது…..!!


கவிதையாக்கம்
**தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்**

Thursday, January 30, 2014

திண்ணை காத்திருக்கு.....!!



இருபுறம் திண்ணைகொண்ட சாலையினில்

இருகை வீசி இளந்தோழிகள்சூழ் செல்லும் மெல்லியளால்

இளந்தென்றல் தீண்டியதில் சிலிர்த்தவள்..! நாணத்தில் சிவந்தவள்,.!

புல்லின் வளைதலை கொண்ட இடையுடையவள்

பூவின் இதழ்மென்மை ஏற்ற மென் நடையுடையவள் ,

காணும் என் விழி இமைக்க மறுத்ததில்.

எனக்குள் இசையாக்கிவிட்டவள்

கூட்டம் சூழ் தோழிகளின் மத்தியில் மெல்லியஇடையினில்

கையிருத்தி நிமிர்ந்து நோக்கியவள்

தன் அகன்ற கரும் வண்டென விரியும் விழிக்குள்

விழுங்கிக்கொண்டாள்  எனை ..!!

நிலம் நோக்கி  புன்னகைத்தவள் கூட்டதில் சிலீர் சிரிப்பினூடே

கலந்து மறைந்தாள்..!!

அலையும் விழிகளும்  தவித்த இதழுமாய்

அங்குமிங்குமாய் என் பார்வை தவிக்க  திண்ணையோரமும்

தினம் தினம் காத்திருக்கு எனக்காக அவளை காண  ..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்

Monday, January 27, 2014

உனை காண காத்திருக்கையில்…


நிலவும் விண்மீனும் வானத்தில் நடனமாடும்..!!

மீனினம் கடலினில் சேர்ந்தாடும்..!!

மாம்பழ வாசமதில் மரத்தினை சுற்றி

வண்டும் சுழன்றாடும்..!!

அள்ளி தெளிக்கும் வாசல் நீரும்

கைகளில் நின்றாடும்..!!

புள்ளிவைத்து கோலமிடும் விரல்கள்

நாணத்தில் நாட்டியமாடும்..!!

பின்னலிட்ட கூந்தலும் தன்னிலை மறந்து

அவிழ்ந்து அலைபாயும்..!!

இருளின் வைரமாய் மின்னும் விளக்கின்

ஒளியும் நின்றாடும்..!!

என் மன ஒலியும் ஆர்பரிப்பாய்

உன்புன்னகையில் துள்ளிவிளையாடும்..!!

உனை காண வேண்டி தவம் இருக்கையில்

விரல்களுடன் இணைந்த நாரும் பூக்களுடன்

சேர்ந்தாடும் !!இவையனைத்தும் போதும் எனில்

விரைவினில் வந்து முகம் காட்டிவிடு..!!


கவிதையாக்கம்
தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்

Saturday, January 25, 2014




நீயென் வாழ்வினில்….


நின்னை நினைப்பதில் என் வாழ்வில்

இன்பம் மட்டுமே நிகழ்கிறது என்பதை

நின் மனம் அறியுமோ தென்றலே!

உன்வரவை என்னுயிர் கண்டதும்

உள்ளம் விருப்பத்தில் இழைய

நிலவும் ஒளிர்கிறது என் வண்ணமாய்!

உலாவும் மானென துள்ளி

மகிழுந்திடுவேன்! மன ஓடத்தை ஓட்டி

மகிழ்ந்திடுவேன்! தேன் துளியில் மூழ்கும்

வண்டென சுற்றி பறந்திடுவேன்!

நிலவை மொய்க்கும்  விண்மீனாய் 

கீற்றை தழுவி சலசலக்கும் தென்றலாய்

முப்பொழுதினிலும் உன் மனதை வென்ற

களிப்பினில்  சின்னப்பறவையின் கீச்சுக்குரலாய்

பாடி ஆடித் திரிந்திடுவேன்…!!



கவிதையாக்கம்
தமிழ்ச்செல்விநிக்கோல்ஸ்




Friday, January 24, 2014

ஒரு மதியபொழுதினில் ஒர் நாள் ..1930 ல்.....







முற்றத்து நடுவினில் ஓயாமல்

சத்தமிட்டபடி தானியத்தை கொத்தித்தின்றன

குருவிகளும் காக்கைகளும் புறாக்களும்

ஒரு மதியபொழுதினில்


இனிமையும் ஆர்பரிப்பும் அவைகளின்

இறக்கை அடிப்பிலே தெரிந்தது  அதில்

ஒற்றை புறா ஒன்று உணவை  விழுங்கி

ஊட்டிக்கொண்டிருந்தது பிள்ளைக்கு


அடுக்களையில் புகை சூழ் நடுவே

கற்றையாய் விழும் கூந்தலை

அள்ளி முடிக்க வியர்வை மழையால்

குளித்து போயிருந்தன அவள் விழிகளும்


சைக்கிளின் மணிச்சத்தத்தில் படபடவென

பறந்த பறவைகள் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது

கிடுகிடுவென்று வாசல் போனது மனம்


நீள்வாசலின் நேரேதிரே மாட்டியிருந்த

அலமாரி கண்ணாடி கூறியது அவள்

நெற்றி பொட்டிழந்தக்கதையை ..அவன்

நினைவுக்குழந்தையாய் கரம் பற்றி 

அணைத்திருந்தான்


அழவுமில்லை மீண்டும் பொட்டிட துணிவுமில்லை

பறவைகளினூடே ரெக்கைகட்டிபறந்தமனம் 

சிலாகித்தது ..!!

நெல் மணிகளை சிதறிக்கொண்டிருந்தது

கைவிரல்கள்..!



கவிதையாக்கம் 
**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்** 

Thursday, January 23, 2014

கருப்பு திராட்சை




படபடவென்று சிறகு விரித்து கோர்த்துக்கொள்ளும் இமைகள்..! 

நிற்க மறுத்து நாட்டியமாடும் இதழ்கள்..! 

இன்னிசை மீட்டிடும் இதயம் இயல்பை மறுக்கும்..!

சிலிர்க்க செய்யும் இளம்தென்றல் ..!

அந்திமாலையின் சிகப்புபடர்ந்து கொள்ளு(ல்லு)ம் என்னில்..!

உனைக்கண்டதும்..!


எனைக் கண்டதும் உன் காதோர வியர்வையும்

உன் காதலை சொல்லும் என்னிடத்தில்

சந்தோசத்தில் மின்னும் வைரமாய்

மலரை ஈர்த்த வண்டாய் மையல் கொள்ளுவேன்

உன்னிடத்தில்..!

தத்தையென கொஞ்சிபேசும் இதழ்வருடி என்னிதழ்தேனால்

நிரப்புவேன்..!!


தொடுதலில் சில்லென மின்னலாய் பரவும் ஒளிவெள்ளமும்,

மூச்சுக்காற்றின் இணைதலில் முடிவற்று மெளனநிலையில்

சட்டென விலகி செல்லும் உன் உயிரின் ஈர்ப்பும் வேகமும்

தழுவிடும் தென்றலின் தீண்டலில் அறிகிறேன்..!!

உன் இடைவெளியற்ற அன்பின் இருக்கம்

வெண்மேகத்தில் கனிந்த கருப்பு திராட்சையின் அசைவில்..!!

அறிவேன் உன் எண்ணத்தை..!

இனி பிரிதல் என்பதே இல்லை நம்முள் இருக்கிக்கொள்கிறேன்

இடைவெளியின்றி….!!



**தமிழ்ச்செல்வி நிக்கோல்ஸ்**