Thursday, August 9, 2012

பிறந்த நாள்



ஸ்ரீ இங்க வாம்மா ....என அம்மா கூப்பிட ஸ்கூல்பேக் எடுத்துக்கொண்டு

ஓடினேன், என்னுடைய கையை பிடித்து கொண்டு மெதுவாக நடந்தாள்

அம்மா, இன்னும் நேரம் இருக்கு பள்ளி வாகனம் வர..

சுசி அக்காவும்,அத்தையும் வந்தாங்க,அத்தை அம்மாவுடன்

பேசி கொண்டே வந்தாங்க.சுசி அக்கா என் கையை பிடித்து

தன்னுடன் என்னை சேர்த்து நடந்தாள்....

சுசி அக்கா நீங்க நேற்று சொன்னது போல ஈவ்னிங் வீட்டுக்கு

வாங்க உங்க கை நிறைய சாக்லேட் கேக் எல்லாம் தரேன் ....

ம். வரேண்டா ....

எங்க பஸ் முன்னாடி வந்திடும் நான் உனக்காக வெய்ட் செய்கிறேன்...

உனக்கு என்ன வேணும்னு சொல்லு அக்கா வாங்கிகொண்டு வரேன்....


டா... டா டா ...


கல்லூரி பேருந்துக்குள் ஏறும் வரை என் கவனம் ஸ்ரீ மீது..எல்லாருக்கும்

சாக்லேட் கொடுத்து கொண்டிருந்தது பஸ் நிலையத்தில்..

இன்று கல்லூரியில் ஸ்ரீயை பற்றி தோழிகளிடம் அதிகம் பேசினேன்...

முதல் வகுப்பில் படிக்கும் அவளுக்கு,அழகான ஒரு பென்சில்

பாக்ஸும், குட்டி கரடி பொம்மையும் வாங்கினேன்... ஸ்ரீ கேட்ட

பெயின்டிங் செட்டும் வாங்கி கொண்டேன்....


அவளுக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தேன்..

மாமா பிள்ளைகளை அழைத்து கொண்டு பள்ளிவேனில்

சென்றார் புன்னகையுடன்...

ஸ்ரீ யின் பஸ் நிற்காமல் கொஞ்சம் தள்ளி நின்றது...

பின்னால் சத்தம் போட்டு கொண்டு

மக்கள் ஓடி வர...பஸ்சிலிருக்கும்

பிள்ளைகள் அழுது கொண்டே இறங்க .

டிரைவர் இறங்கி ஓட மக்கள் விரட்ட....

பரபரப்பு..அங்குமிங்கும் ஸ்ரீ யை தேட என் கண்கள்....

தார் சாலையில் தாராய் அவளின் ரத்தம் ஓட ...

சுருண்டு கிடந்தாள்...

முதல் சுவாசம் கிடைத்தநாளில் ...சுவாசமின்றி..
---------------------------------------------------------------------

Friday, August 3, 2012

கைம்பெண்ணின் கனவுகள்




என் நினைவுகளின் நேரங்கள் ...
தன் வயம் கொண்டகனவுகள்
குழலின் நாதம்போல நீண்டுசெல்லும்நேரங்கள்....
இனம்புரியாமல் காணுகின்ற கனவுகள்
விழிக்கையில் இனம் புரியா படப்படப்பு
உயிர் துடிக்க உடலெங்கும் தகிக்க ..

விழிகளின் வேலிகளுக்குள் நீ எனை
மீண்டும் அழைக்க.உன்னுடனான அந்த
கனவு கோட்டைக்குள்....அளவில்லா
ஆனந்தங்கள் ,கரிய இருளுக்குள்...
வெளிச்சத்தை கொண்டு வரும் ..
நினைவுக்கனவுகள்

பலவண்ணங்களாய் சிதற தினம் தினம்
கனவுக்குளியல் சிறகடித்து பறக்க...
வெடவெடத்து உயிர் நடுங்க ...
தனிமை கனவுகள் உடலை சருகாக்கும்
தீயிலிட்டு பொசுக்கும் தருணம்

சாரலாய் தூறலாய் நீ என் மேல் விழ...
நிலையில்லா கனவுகளின் மேலிருந்து
விழுந்து ,வேதனைகளை...மறைத்து ,
சன்னல் கம்பி பிடித்து எழுந்தேன்
கோடி சாரலாய் கொட்டிய மழையுடன்
இணைந்தேன் நீ என்று..................

கருவறை ஊமை

மலையில நாம் ஓடி இருந்தால் நிச்சயம் வளைந்து நெளிந்து ஓடி

பாதையை பிடித்திருப்போம்..

ஆனா இப்படி எல்லாருடனும் ஓட வேண்டி இருக்கே நொந்துகொண்டேன்.

நான் ஜெயிக்கவேண்டும் என்ற வெறி மட்டுமே எனக்கு.

நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களோடு ஓடிவர நான் மட்டும் வெற்றிக்கனி பறித்தேன்,

அளவில்லா ஆனந்தத்தில் மிதக்க..

என்னுடன் இன்னொருவரும் இணைந்து வர.....

நான் மிகவும் வேதனையோடு வெற்றியை பகிர்ந்து கொள்ளணுமா

என நினைத்து கண்ணீர் விட்டேன்..

அம்மா சந்தோஷத்தில் தடவி கொடுத்தார்.. விட்டு கொடுத்தேன்..

நாட்கள் நகர்ந்தன, நிறைய வேறுபாடுகள்

எங்களுக்குள். நிறைய சந்தோசங்கள்

சின்ன புன்னகைகள் ,விட்டு கொடுத்து இருப்பது

என எல்லாவிதத்திலும் ஒற்றுமையாய் இருந்தோம்..

புது உலகை நோக்கி எங்கள் பயணம் முதலில் அவளும் ,பின்னர் நானும் ..

எங்கள் அருகினில் அம்மா ......சந்தோசங்கள் கொஞ்சல்கள் ...

அவள் தங்கையாம்,நான் அண்ணன் என்று பல குரல்கள்....

அருகினில் அம்மா... சட்டென்று ஒரு மயான அமைதி அருகினில் குரல்களை காணோம்

.கண் விழித்து பார்க்க தங்கையை காணோம் ..குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள்

9து மாதங்கள் என்னுடன் வாழ்ந்தவள்,இருட்டுக்குள் என் அன்பை பெற்றவள்

பிறக்கும்முன்னே வெற்றி பெற்றவள் பெண் குழந்தை என்பதால்..

அழிக்கப்பட்டாள் என் சகோதரி .


விருப்பமில்லா பிறப்பை ஊமையாய் எதிர் கொண்டேன் நான்...



Tuesday, July 17, 2012

எப்போதும் என் நினைவில் நீ ....


விடியலின் பொழுதுகளில் உன்
ஞாபகம் எப்போதும் ...
இரவின் துவக்கத்தில் -உன்
மடி சாய்ந்த ஞாபகம் .....

நீ உறங்குகையிலும் உன்
முகம் எனை எதிர்பார்த்து ....
வந்துவிட்டேன் உன்னருகில் -இனி
எப்போதும் உன்னை விட்டு செல்ல
மனம் விரும்பவில்லை ....

ஆழ்ந்து உறங்குகிறாய் ..உன்
உறக்கத்தில் தான் எத்துணை
சந்தோசம் அம்மா ...என் அருகாமை
இன்றி எத்தனை வேளைகள்
எத்தனை பொழுதுகள் -நீ
காத்து கொண்டிருக்கிறாய் ..எனக்காக ..

உன் உறக்கத்திலும் உன்
விரல்கள் என்னை வருடுகின்றன..
தேடுகின்றன என் மோதிரத்தை ...
அப்பாவினோடது நினைவாக ..
என் விரல்களில் ....

எத்தனை காய்ப்பும், கரடு
முரடுகளும் உன் கைகளுக்குள்..
எத்துணையும் இன்றி ....
உன் கைகளுக்குள் நான்
இத்துணை வயதிலும் .....

வார்த்தைகள் எப்போதும்
மென்மையானது உனக்கு-
அந்த மென்மை உன்னை
மேன்மை ஆக்குகிறது அம்மா
எப்போதும் எனக்குள் ...

ஓராயிரம் ஆண்டுகள்....
ஆனாலும் உன் அன்பிற்கும் ,
அரவணைப்புக்கும் இணை....
உன் அன்பு மட்டுமே ...அம்மா

எத்துணையின்றி இத்தனை
காலம் அம்மா நீ -
என் துணையுடன் இனி வரும்
காலமெல்லாம் நீ என்னுடனே அம்மா

Friday, June 15, 2012

வண்ணங்களின் ஆளுமைகள்





வண்ணங்களில் ஒளிந்து கிடக்கிறது....
அடர்ந்த ஒன்று கோரமேன்றும்...
மற்றொன்று அழகென்றும்...
மாந்துளிர்களை கொண்டது போதுமென்றும்...
வண்ணங்களின் எண்ணங்கள் ...

ஒளிந்துதான் உள்ளது எல்லோரிடத்திலும் ...
அதை கொண்டுதான் வாழ்கை நடக்கிறது .......................
நான் அவைகளை கண்டுகொள்ள போவதில்லை .......

உண்மையும்,பொய்யும் தொடர்கின்றன -என்னை....
இனங்களிலும் ,மதங்களிலும் ஆளுகின்றன அவை ....
என்னையும் அவை தனக்குள் கொண்டு செல்ல முயற்சிக்கின்றன..

காலங் காலமாய் வண்ணங்கள் பிரித்தாளுகின்றன....
தொட்டு வாங்குவது,தொடமால் போடுவது...
தொடாத நீர் நிலைகள், வணங்காத கோயில்கள் ..
நான் ஒதுக்க முயற்சி மேற்கொள்கிறேன்...

இதை மாற்ற முயற்சிகொண்டு ...........
மற்றதை ...........தொடர நினைக்கிறேன் ,

வண்ணங்களில் சிக்கி கொள்கிறேன்.......

//எண்ணங்களுக்கேற்றபடி வண்ணங்களும் மாறும் அம்மா//.

Friday, May 25, 2012

ஒத்தையாய் பெற்றதால் ...


ஒத்தையாய் பெற்றதால் ....................

தாயும் உண்டு...அருகே
தந்தையில்லை ....
கணவன் உண்டு - அருகே
கடல் தாண்டி வேலை கொண்டு ...
சகோதரிகள் உண்டு -அருகே
மாலை மாற்றி, வேறு வீடு
சென்றதால் பிரச்சனைகள் -கொண்டு
சகோதரன் உண்டு- அருகே
மனைவியின் வீட்டில் சத்தமில்லாமல் ...

ஆறுதல் கூற ஆளில்லாமல் -அருகே
தலை சாய தோளில்லாமல்-என்
சிரம் தாழ்ந்து எதையோ நோக்கி -என்
நினைவுகள் உனை நோக்கி படையெடுக்க-என்

தாயும் தந்தையுமானவளே-உன்
கல்லூரி சுற்று பயணம் -முடித்து
சீக்கிரம் இந்த தாய் -அருகே
வந்துவிடு என் கண்மணியே....

இலவசம்


11 hours agoTamizh Selvi

கருப்பும வெள்ளையும் .....ஆஹா.....
கலரும் ரிமோட்டும்....ஆஹா.....
வளைந்த முன் பகுதியும் ....ஆஹா ...
தட்டையான ,மெல்லிய -உருவமும்
எங்கும் மாட்டிக்கொள்ளலாம் -எனும்
வடிவத்தில்-ஆஹா .... இது ஒரு காலம்....

சர்க்காரு இலவசமாவே கொடுத்தது ...
சகலவங்களுக்கும் ....
மரம் இல்ல... காத்தும் இல்ல....
வெயிலும் கூட கூட......
சர்க்காரு கொடுத்தது மேசை விசிறி (மின்)
இலவசம்தான் ...அள்ளி அள்ளி .............
எல்லாமே மின் சாதன பொருளு ..... இது ஒரு காலம்

"அன்னிக்கி பாடினாரு NSK ...........
இன்னிக்கு எல்லாமே மின்சாரத்த ....
தட்டின தட்டுல கிடைக்குது
ஊரே நவீன மயமாயிட்டதுன்னு...
நினைக்க இல்ல..... இல்ல....
மயானம்மாயிட்டது ......
மின்சாரம் இல்ல .தண்ணி இல்ல
டாஸ்மார்க் மட்டும் உண்டு
மின்சாரம் இல்ல ...உற்பத்தி இல்ல
ஆனா இறக்குமதி உண்டு ..வரி உண்டு ...
விலை ஏற்றம் உண்டு ...
பூங்காக்கள் இல்ல ......
நவீன IT பூங்காக்கள் உண்டு ...
மின்சாரம் இல்ல ...
மின் மயானமும்... இல்ல
வர நேரமும் தெரியல .........
போற நேரமும் தெரியல ..........
மரங்கள் இல்ல .....
மயானத்தில விறகும் இல்ல
எங்கும் அடுக்கு மாடி உண்டு
புதைக்க எரிக்க இடம் இல்ல ...

ஆண்ட காலத்தில மழை நீர் -சேகரிப்பு
போல...........வீட்டுக்கு ரெண்டு மரம் ...
எல்லாத்துக்கும் எல்லாமும் கிடைத்திருக்குமே

எல்லாத்துக்கும் கண்டனம் உண்டு ....
.ஆனா ஒத்துமை இல்ல ..
இது இப்போ நடக்கிற காலம் ...

அக்கம் பக்கம் கொஞ்சம் .............
பாருங்க ....நாங்களும் எளியவங்க தானுங்க...
ஆனா போராடுவோம் ....கொஞ்சம்
வாழ்ந்து இன்றும் பேசப்படும்...........
தலைவர்களை போல வாழ ஆசைபடுங்க.....